Wednesday, October 2, 2013

உனக்கான எனது
அழகிய கவிதை

எனக்கான பாதை
இதுவரை சரியாகத்தான் இருந்தது
எதிரே வந்தவன்
தடுமாறி மோதும் வரை…
காயம் எனக்கும் தான்

அவன் வார்த்தைகளில்
ஏதோ வசியம் வைத்திருக்க வேண்டும்
செல்லக் கொஞ்சலில்
கல்லும் கரைந்து தான் போகும்
நான் எம்மாத்திரம்
வசமானேன்..
வரமாகுமா…
சாபமாகுமா..?

உன் விதியின் பக்கங்களில்
என் பெயரும்
எங்கோ
எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது
காதலும் தான்…

வெற்றுக் காகிதம் ஒன்று
வெறுமையாய் கிடக்க
நீ வந்து கிறுக்கி சென்றாய்
அழகாய்……..